ராஜஸ்தான் மாநிலம் துங்கார்பூர் மாவட்டம் சதிராம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்ராம் மனத் (வயது 35). இவரது சகோதரி துர்க்கா (வயது 28). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.
துர்க்கா கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக அண்ணன் வேல்ராம் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
அண்ணன் மீது துர்க்கா அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்.
இந்நிலையில், வியாழக்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில் வேல்ராம் உயிரிழந்தார்.
பின்னர் அவரது உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது.வேல்ராம் உடல் தகனமேடையில் வைக்கப்பட்டு சிதைக்கு நெருப்பு மூட்டியபின்னர் உறவினர்கள் அவரவர் வீடுகளுக்கு சென்றுவிட்டனர்.
அப்போது சுடுகாட்டிற்கு சென்ற துர்க்கா, எரிந்துகொண்டிருந்த அண்ணனின் சிதையில் திடீரென குதித்துள்ளார்.
இதைப் பார்த்த ஒருவர், துர்க்காவின் குடும்பத்தினருக்கு தெரிவிக்க, அவர்கள் சுடுகாட்டிற்கு விரைந்து வந்தனர்.
அதற்குள் துர்க்கா உடல் கருகி இறந்து விட்டார்.அவர் இறந்ததை டாக்டர் உறுதி செய்ததையடுத்து, பாதி எரிந்த நிலையில் இருந்த அவரது உடல் முழுவதுமாக எரியூட்டப்பட்டது.
அண்ணன் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் அவரது சிதையில் குதித்து தங்கை உயிரைவிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
