புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயாருக்கு அச்சுறுத்தல் விடுத்த சந்தேக நபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் ஜுலை மாதம் 5 ஆம் திகதி வரை ஊர்காவற்றுறை நீதிமன்றம் நீடித்துள்ளது.
புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக அவரது தாயாரை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் வித்தியா கொலை வழக்குச் சந்தேகநபர்களான சுவிஸ்குமாரின் தாயார் மகாலிங்கம் தவராணி, உசாந்தனின் தாயார் சிவதேவன் செல்வராணி ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளனர்.
இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது சந்தேகநபர்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி ஆர்.சபேசன், சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்குமாறு விண்ணப்பம் கோரியுள்ளார்.
எனினும் பிணை மனுவை நீதவான் எம்.எல்.றியால் நிராகரித்ததோடு, வித்தியா கொலை வழக்கு நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்திய வழக்கு என்பதால் சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்க முடியாது எனவும், மேல் நீதிமன்றத்தில் முறையீடு செய்யுமாறும் தெரிவித்து சந்தேகநபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் ஜூலை மாதம் 5ஆம் திகதி வரை நீடித்து மீண்டும் உத்தரவிட்டுள்ளார்.

