பிரேஸிலில் இருந்து சீனி இறக்குமதி செய்யும் நடவடிக்கைகளிடையே 200 கோடி ரூபா பெறுமதியான 80 கிலோ கொக்கெய்ன் போதைப்பொருளினை நாட்டுக்குள் கடத்தியசம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு ஆரம்பித்துள்ளது.
அதன்படி இந்த கொக்கெய்ன் போதைப் பொருள் கடத்தலின் பின்னணியில் உள்ளதாக கருதப்படும் பிரதான சந்தேகநபரான பிரேசில் பிரஜை தற்சமயம் இலங்கைக்குள் இருப்பதாக சந்தேகிக்கும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அவர் தப்பி செல்லக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளதால் அதனை தடுக்க தீவிர நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது.
இது தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் ஊடாக தகவல்களை சேகரித்துள்ள பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சந்தேக நபர் தப்பிச் செல்வதை தடுக்கும் முகமாக அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து இலங்கையில் உள்ள பிரேசில் தூதரகமும் போதைப் பொருள் தடுப்புப் பணியகம் ஊடாக தகவல்களை சேகரித்துள்ள நிலையில் அந்த தூதரகமும் பிரத்தியேக விசாரணை ஒன்றினை ஆரம்பித்துள்ளது.

