குஜராத் மாநிலம் சூரத் அருகே உள்ள லஸ்கனா பகுதியில் நாராயண சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள சுவாமி சிலைக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரின் சீருடையான காக்கி நிற அரைக்கால் டிரவுசர், வெள்ளை சட்டை மற்றும் கருப்பு தொப்பி அணிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் சிலையின் ஒருகையில் தேசியக்கொடியும் இருந்தது.
இது குறித்து காங்கிரஸ் தலைவர் சங்கர் சிங்வகேலா கூறியதாவது,
கடவுளுக்கு காக்கி அரைக்கால் டிரவுசர் அணிவித்து எதை நிரூபிக்க போகிறீர்கள்? இதை செய்தவர்கள் மீது இரக்கப்படுகிறேன்.
இன்று நீங்கள் ஆர்.எஸ்.எஸ். சீருடை அணிவிப்பீர்கள், நாளை பா.ஜனதா சீருடையை அணிவிப்பீர்கள். இது போன்ற நடவடிக்கைகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
கோவில் நிர்வாகத்தினரின் இந்த செயலுக்கு பா.ஜனதாவும் அதிருப்தி வெளியிட்டு உள்ளது.
மாநில பா.ஜனதா தலைவர் விஜய்ருபானி இது குறித்து கூறுகையில், ‘இதை பார்த்து உண்மையிலேயே நான் ஆச்சரியப்பட்டேன். இதைநான் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டேன். இது கண்டிப்பாக நடந்திருக்கக்கூடாது’ என்று தெரிவித்தார்.
கோவிலின் சுவாமிஜி விஸ்வபிரகாஷ் இது குறித்து கூறுகையில்,
நாங்கள் இந்த சுவாமி சிலைக்கு நாள்தோறும் வெவ்வேறு உடைகளை அணிவிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த சீருடையை உள்ளூர் பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கினார். எனவே நாங்கள் இதை அணிவித்தோம்
என்று கூறியுள்ளார்.
