Headlines
Admin-message

அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Published by tamilkurall on  | 


அவுஸ்திரேலிய கொக்கொஸ் தீவு பிராந்தியத்தை கடந்த வாரம் சென்றடைந்த இலங்கையைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் அனைவரும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவுஅமைச்சர் பீற்றர் டத்தொன் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் கலந்து கொண்டு விளக்கமளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த 12 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களும் சென்ற படகு 500 மைலுக்கும் குறைந்த தூரம் பயணித்து கொக்கஸ் தீவு பிராந்தியத்தை வந்தடைந்திருந்தது.
இந்நிலையில் அந்தப் படகிலிருந்த இலங்கையர்களான அனைத்து புகலிடக் கோரிக்கையாளர்களும் கடந்த 6ம் திகதி அவர்களது தாய்நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பீற்றர் டத்தொன் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அவுஸ்திரேலியா அந்த வருடத்தில் புகலிடக் கோரிக்கையாளர்களுடன் வந்த 3 படகுகளை குறுக்கீடு செய்து தடுத்து நிறுத்தியதாக தெரிவித்த அவர், அவ்வாறு குறுக்கீடு செய்யப்பட்ட ஏனைய இரு படகுகள் தொடர்பில் விபரம் எதனையும் வெளியிடவில்லை.
இந்நிலையில் அவுஸ்திரேலிய தொழிற் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரான சோபி இஸ்மாயில் தெரிவிக்கையில், அவுஸ்திரேலியாவின் சர்ச்சைக்குரிய குடிவரவு கொள்கைகள் தொடர்பில் கவலை அடைந்துள்ளதாக கூறியுள்ளார்.
படகுகளில் வருபவர்களில் 90 சதவீதமானவர்கள் நிஜமான அகதிகள். அவர்களை அகதிகள் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடாத நாடுகளுக்கு திருப்பி அனுப்புவது பிரச்சினைக்குரிய எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் பீற்றர் டத்தொன் விபரிக்கையில், இது குடியேற்றக் கொள்கை தொடர்பில் தொழிற் கட்சி பிளவுபட்டிருப்பதை காண்பிப்பதாகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதேசமயம் பபுவா நியூகினியில் மனுஸ் தீவிலுள்ள அவுஸ்திரேலியாவின் தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் தீர்மானிக்க பல மாதங்கள் செல்லலாம் என அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பான தீர்மானம் எதிர்வரும் ஜூலை மாதம் 2ம் திகதி இடம்பெறவுள்ள தேர்தலுக்கு பின்னரே எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
பபுவா நியூகினி உச்சநீதிமன்றம் அந்த தடுப்பு நிலையம் அந்நாட்டு அரசியலமைப்பின் பிரகாரம் சட்டத்திற்கு புறம்பானது என அண்மையில் தீர்ப்பளித்திருந்தது.
அவுஸ்திரேலியா தனது நாட்டுக்கு சட்டவிரோதமாக படகுகளில் வரும் புகலிடக்கோரிக்கையாளர்களை தடுத்து நிறுத்தி அவர்களை மனுஸ் தீவு மற்றும் நாவுறுவிலுள்ள தடுப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைத்து வருகிறது.
புகலிடக் கோரிக்கையாளர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களால் கட்டுப்படுத்தப்படும் அபாயகரமான பயணத்தை மேற்கொண்டு வருவதால் அத்தகைய பயணங்களை தடுத்து நிறுத்துவது தனது கடமை என அவுஸ்திரேலியா வாதிட்டு வருகிறது.
இந்நிலையில் புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பான மேற்படி நடவடிக்கை இனரீதியான தூண்டுதலால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடியேற்றக் கொள்கைகளின் எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் நாவுறுவிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான தடுப்பு நிலையத்தில் இருவர் தீக்குளித்திருந்தனர். அவர்களில் 23 வயதான ஆண் உயிரிழந்திருந்தார்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top