தேசிய கட்டட ஆய்வு நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி, நுவரெலியா, கண்டி, கேகாலை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்யும் சந்தப்பத்தில், மண்சரிவு மற்றும் கற்பாறை சரிந்து விழும் அபாயம் காணப்படுவதாக இடர்முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள மக்கள் , அனைத்து சந்தரப்பங்களிலும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நிலவும் மழைக் காரணமாக பிரதான ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
களுகங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையால் 105 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஆறுகளை அண்மித்த பகுதிகளில் வாழ்வோர் அவதானத்துடன் செயற்படுமாறும் இடர் முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காக வெளிநாடுகளிலிருந்து கிடைத்த நிவாரணப் பொருட்கள் உரிய வகையில் பகிர்ந்தளிக்கப்படுவதாக இடர்முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
உலர் உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், மின்பிறப்பாக்கிகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான ஏனைய அத்தியாவசிய பொருட்கள் என்பன வெளிநாடுகளிலிருந்து கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படுகின்ற போதிலும், மின்பிறப்பாக்கிகளை தற்காலிக முகாம்களில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

