இம்முறை சமூக வலைத்தளங்களிலும், பிரசாரங்கள் சூடுபிடித்திருந்ததால், இலங்கைத் தமிழர்கள் மத்தியில் அதிகளவில் இந்த தேர்தல் ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தது.
2009ல் முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குத் துணைபோன காங்கிரஸ் கட்சியும், அப்போது அதனுடன் இணைந்திருந்து விட்டு, பின்னர் இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸ் கட்சியுடன் இனிக் கூட்டில்லை என்று அறிவித்து விட்டு விலகிய தி.மு.க., இம்முறை மீண்டும் காங்கிரசுடன் கூட்டு வைத்துக் கொண்டு ஒரு அணியாக களமிறங்கியிருந்தது.
இது தமக்குத் துரோகமிழைத்த கூட்டணி என்ற எண்ணம், இலங்கைத் தமிழர்கள் மத்தியில் ஊறிப் போயிருப்பதால், இதற்குச் சார்பான நிலை இங்கு இருக்கவில்லை.
அதேவேளை, இலங்கைத் தமிழர்கள் மத்தியில், மூன்று அணிகளுக்கு கூடுதல் ஆதரவு காணப்பட்டது. ஏற்கனவே ஆட்சியில் இருந்த அ.தி.மு.க.. புதிதாக உருவாக்கப்பட்ட மக்கள் நலக் கூட்டணி,- தே.மு.தி.க. - த.மா.க அணி, சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியனவே அவையாகும்.
பா.ம.க. வும் இலங்கைத் தமிழர் ஆதரவுக் கட்சியாகவே அறியப்பட்டாலும், அதன் மீது அவ்வளவாக ஈர்ப்பு இலங்கைத் தமிழர்கள் மத்தியில் இல்லை.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழீழம் மலரத் துணை நிற்போம் என்று வாக்குக் கேட்ட ஜெயலலிதாவின் அ.தி.மு.க., இம்முறையும் அதே நிலைப்பாட்டையே முன்னிறுத்தியது.
அதைவிட, கடந்த சட்டப்பேரவையில், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான தீர்மானங்களை நிறைவேற்றியும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவிக்கும் ஏழு பேரை விடுவிப்பதற்கும் கணிசமான முயற்சிகளை முன்னெடுத்தும், இலங்கைத் தமிழர்கள் மத்தியில் ஆதரவைப் பெற்றிருந்தது அ.தி.மு.க.
அதைவிட, தமிழ்நாட்டில் முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்காக கூடுதல் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தும் இருந்தது.இவை அந்தக் கட்சிக்கு இலங்கைத் தமிழர்கள் மத்தியில் ஆதரவான நிலையை ஏற்படுத்தியிருந்தன.
புலம்பெயர் தமிழர் அமைப்புகளில் சிலவும், ஜெயலலிதாவின் வெற்றியை சாதகமாகவே கருதியிருந்தன.
வைகோ, திருமாவளவன் போன்றவர்கள் இடம்பெற்றிருந்த மக்கள் நலக் கூட்டணி – தே.மு.தி.க. - த.மா.க அணிக்கும் கணிசமான ஆதரவு இலங்கைத் தமிழர்கள் மத்தியில் காணப்பட்டது.
தமிழ்நாட்டில் மாற்று அரசியலை விரும்பிய பலரும், அதற்கு ஆதரவளித்தனர். இந்தக் கூட்டணிக்கு ஆதரவாக, சமூகவலைத்தளங்களில் ஏராளமான இலங்கைத் தமிழர்களும் கருத்துக்களைப் பகிர்ந்து வந்தனர்.
அடுத்து, சீமானின் நாம் தமிழர் கட்சி. 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. பணத்தைக் கொடுத்தால் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையை புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தி, அங்கிருந்தும் நிதி திரட்டிய ஒரே கட்சி இது தான்.
அதைவிட விடுதலைப் புலிகளினதும், பிரபாகரனினதும் பெயர், படங்களைப் பயன்படுத்தி, வாக்கு சேகரித்த ஒரே கட்சியும் இதுவே. உணர்ச்சியூட்டும் சீமானின் பிரசாரத்துக்கு இலங்கைத் தமிழர்களும் அதிகளவில் அடிமையாகிப் போயிருந்தனர்.

