அண்மையில் நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக வீடுகளில் காணப்பட்ட மின்சார உபகரணங்கள் மற்றும் ஏனைய பொருட்கள் சேதமடைந்த போதிலும் அவற்றுக்கு நட்டஈடு வழங்கப்படாது என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகங்களுக்கு வார இறுதியில் கருத்து வெளியிடுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
இயற்கை அனர்த்தம் காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு அரசாங்கம் நட்ட ஈடு வழங்கும்.பாதிக்கப்பட்ட வீடுகளுக்காக நட்ட ஈடு வழங்குவது குறித்து கடந்த 27ம் திகதி விசேட சுற்று நிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சுற்று நிருபத்தின் பிரதிகள் மாவட்டச் செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.சேதமடைந்த வீடுகள் குறித்த மதிப்பீட்டு அறிக்கைகள் துரித கதியில் அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் அது குறித்து கிராம உத்தியோகத்தருக்கு முதலில் அறிவிக்க வேண்டும்.
பின்னர் பிரதேச செயலகம் ஊடாக தேவையான மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்படும்.சேதமடைந்த வீடுகளுக்கு குறைந்த பட்சம் ஒரு லட்சம் ரூபா முதல் அதிக பட்சமாக இருபத்து ஐந்து லட்சம் ரூபா வரையில் நட்ட ஈடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

