இந்தியப் பிரதமரின் அலுவலக இணையதளம் தற்போது ஆங்கிலம், தமிழ் , மலையாளம், தெலுங்கு, இந்தி, வங்கம், மராத்தி மற்றும் குஜராத்தி மொழிகளிலும் பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த இணையத்தளத்தை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று ஆரம்பித்து வைத்துள்ளார்.
இந்திய பிரதமரின் இணையதளம் இது வரை ஆங்கிலத்தில் மட்டுமே இருந்து வந்தது. இணையத்தில் புரட்சி ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி பெரும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.
அனைத்தும் கணினி மயம் என்பதைவிட அனைத்து நிர்வாக செயல்பாடுகளையும் நெட் உலகமாக மாற்ற விரும்புகிறார். இதனால் அவர் அனைத்து காரியங்களையும் எளிமைப்படுத்த முடியும் என்றும் சாதாரண மக்களும் விரைவில் பயன்பெற முடியும் என்றும் நம்புகிறார்.
இதனால் எந்த பணிகள் இருந்தாலும் அவர் நினைக்கும் விடயங்களை உடனுக்குடன் டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிரம் மற்றும் வாட்ஸ்அப், மூலம் மக்கள் கருத்துக்களை பகிர அழைப்பு விடுத்து வருகிறார்.
இதற்கும் மேலாக அவரது பெயரில் மொபைல் ஆப் தற்போது நடைமுறைப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் பிரதமர் அலுவலக இணையதளம் பல்வேறு மொழிகளில் ஆக்கம் செய்ய ஆணையிட்டார்.
இதன்படி ஆங்கிலம், தமிழ் , மலையாளம், தெலுங்கு, இந்தி, வங்கம், மராத்தி மற்றும் குஜராத்தி மொழிகளிலும் மாற்றப்பட்டுள்ளது.
வழக்கமான ஆங்கில மொழியை காட்டிலும் அவரவர் பிராந்திய மொழிகளிலும் படிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மொழி தேர்வு செய்யும் காலத்தில் தமிழுக்கு 3ஆவது இடத்தை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தியப் பிரதமருக்கு மக்கள் நினைக்கும் கருத்துக்களை அவரவர் மொழிகளில் அனுப்பி வைக்க உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டு நலன் மற்றும் வளர்ச்சி தொடர்பான விடயங்கள் குறித்தும் கருத்துக்களை அனுப்பி வைக்க முடியும். பிரதமருக்கு நேரடியாக போய்ச்சேரும். நாம் கேள்வி கேட்கவும் வசதிகள் உள்ளன.

