இலக்கு இன்றி செல்லும் கூட்டு எதிர்க்கட்சிக்கு அஞ்சப் போவதில்லை என பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் ஒன்றிரண்டு பேர் சிறு தவறுகளை இழைக்கின்றார்கள் என்பதனை ஒப்புக்கொள்வதாகவும் அந்த தவறுகளை திருத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள வார இறுதிப் பத்திரிகை ஒன்றுக்கு நேர்காணல் வழங்கிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
நீண்ட காலமாக நாட்டில் நிலவி வரும் அரசியல் பிரவாகத்தை குறுகிய காலத்தில் மாற்றியமைத்து விட முடியாது.
கூட்டு எதிர்க்கட்சி என்பது எந்தவிதமான அரசியல் நிகழ்ச்சி நிரலும் அற்ற கீழ் மட்டத்தில் எவ்வித அடிப்படையும் இல்லாத ஓர் அமைப்பாகும்.
அரசாங்கத்திற்கு எதிரான ஏதேனும் ஓர் அரசியல் கொள்கைகள் இருக்க வேண்டியது அவசியமாகும்.
ஊழல் மோசடிகளில் ஈடுபடும் நபர்களுக்கு அரசாங்கம் எவ்வித சந்தர்ப்பங்களையும் வழங்கவில்லை. எதிர்காலத்தில் வழங்கப் போவதுமில்லை.
இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆளும் கட்சியின் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு வழிகளில் உதவி செய்திருந்தனர்.
சிலர் நிவாரணப் பொருட்களில் தங்களது புகைப்படத்தை பொறித்து விநியோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்படுகின்றது.
ஒவ்வொருவரும் அரசியல் நடாத்தும் விதம் வித்தியாசமானது. அவரவர் பாணியில் அரசியல் நடத்தினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டியதே முதன்மையானது. அந்த வகையில் ஆளும்கட்சியினர் உதவிகளை வழங்கியிருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

