மாகாணம் ஒன்றின் பிரதான மக்கள் பிரதிநிதியான முதலமைச்சரை உத்தியோகபூர்வமாக அழைக்காது, மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதியான ஆளுநர் தலைமையில் அரச நிகழ்வு ஒன்றை நடத்துவது இனவாத நடவடிக்கை என கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன சாடியுள்ளார்.
நவ சமசமாஜக் கட்சியின் தலைவரான விக்ரமபாகு கருணாரத்ன கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்து, மாகாண சபை என்பது ஆளுநரோ மாகாணத்தின் வேறு அதிகாரிகளோ அல்ல. மாகாண சபை என்பது முதலமைச்சருக்குரியது எனவும் அவர் குறிப்பட்டுள்ளார்.
சம்பூர் சம்பவமானது மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை பரவலாக்காததன் வலுவற்ற பிரச்சினையை பாரதூரமான வகையில் எடுத்துக்காட்டியுள்ளது.
மாகாண சபை என்பது சமூகத்தின் நிறுவனம். கிழக்கில் குறிப்பாக முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்காது அரச நிகழ்வை நடத்தியது கண்டிக்கத்தக்கது.
இதற்கு இடமளிக்க முடியாது. அத்துடன் இந்த சம்பவமானது அதிகாரத்தை பரவலாக்கி நாட்டை ஐக்கியப்படுத்துவதற்கு எதிரான பாரிய தாக்குதல் என குறிப்பிட்டள்ளார்.
தமக்கு ஏற்பட்ட அவமதிப்பு குறித்து மாகாண சபையில் பகிரங்கமாக கூறாத முதலமைச்சர், கோபப்பட்டு பதிலளித்தமையானது பொருத்தமற்றது. வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனின் வழியை கிழக்கு முதலமைச்சர் பின்பற்ற வேண்டும்.
கொள்கை ரீதியாக கருத்துக்களை வெளியிட்டு போராடுவதன் காரணமாகவே வடக்கு முதல்வர் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரபல நபராக இருப்பதாகவும் விக்ரமபாகு கருணாரத்ன இதன்போது தெரிவித்துள்ளார்.

