சம்பூர் சம்பவம் திட்டமிட்ட சூழ்ச்சியா என விசாரணை செய்யுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாதுகாப்புத் தரப்பிற்கு உத்தரவிட்டுள்ளார்.
அண்மையில் சம்பூர் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கிழக்கு மாகாண முதலமச்சர் உயர் கடற்படை அதிகாரியை பகிரங்கமாக திட்டியிருந்தார்.
இந்த சம்பவமானது நாட்டுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சதியா என விசாரணை நடத்துமாறு பிரதமர் கோரியுள்ளார்.
ஜப்பானில் நடைபெற்று வரும் ஜீ7 மாநாட்டில் சம்பூர் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இலங்கை பற்றிய பிழையான ஓர் நிலைப்பாட்டை வெளிக்காட்ட முயற்சிக்கப்படுகின்றதா என்பது பற்றி ஆராய வேண்டும் என பிரதமர் நேற்று படையதிகாரிகளை சந்தித்த போது தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜீ7 மாநாட்டில் பங்கேற்று வரும் நிலையில் ஜனாதிபதி உள்ளிட்ட மாநாட்டில் பங்கேற்றிருக்கும் இலங்கைப் பிரதிநிதிகளை நெருக்கடியில் ஆழ்த்தும் நோக்கில் திட்டமிட்டு சம்பூர் சம்பவம் இடம்பெற்றதா என்பது விசாரணை செய்யப்பட வேண்டும்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் கடற்படை அதிகாரி தொடர்பில் இந்த சம்பவத்தின் அடிப்படையில் இணையத்தில் வெளியாகும் அனைத்து தகவல்களையும் கருத்திற் கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் கோரியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் விளக்கம் அளிக்குமாறு இரண்டு தரப்பினரிடமும் பிரதமர் ஏற்கனவே கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

