G7 மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று பிற்பகல் 2.25 மணியளவில் எமிரேட்ஸ் விமான நிலையத்திற்கு சொந்தமான பயணிகள் விமானத்தில் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக் குழுவினர் சென்றுள்ளனர்.
G7 மாநாட்டின் தற்போதைய தலைவரான ஜப்பான் பிரதமர் சிங்சோ அபேவின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி G7 மாநாட்டில் கலந்துக் கொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்.
சமாதானம், சுபீட்சத்திற்கான சிறந்த வழியைக்காட்டும் சுதந்திரம், ஜனநாயகம், சட்ட ஆட்சி, மனித உரிமைகளின் அடிப்படைப் பெறுமானங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் ஆகிய நோக்கங்களுடன் இந்த முறை G7 மாநாடு நடைபெறுகின்றது.
சம்பிரதாய பூர்வமான G7 நிகழ்ச்சி நிரலுக்கு மேலதிகமாக பூகோள பொருளாதாரம் வெளிநாட்டுக் கொள்கை, தேசிய பாதுகாப்பு, பூகோள சுகாதாரம், பெண்களை வலுவூட்டுதல் ஆகிய விடயங்களுக்கு விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
உச்ச பயனைப் பெற்று பலம் மிக்க ஏழு அரச தலைவர்களின் முன்னிலையில் இலங்கையின் பிரதிமையை எடுத்துச் செல்லவும், இந்த நாட்டின் பொருளாதாரத்துக்குத் தேவையான உச்ச பயனைப் பெற்றுக் கொள்வதற்கும் ஜனாதிபதிக்கு இந்த விஜயம் பயனுள்ளதாக அமையும்.
ஜனாதிபதியுடன் இந்த விஜயத்தில் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம, நவீன் திசாநாயக்க, மஹிந்த அமரவீர ஆகியோர்களும் இணைந்து கொண்டுள்ளனர்.

