Headlines
Admin-message

தடைகள் பல கடந்து அகவை ஏழு கண்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்!

Published by tamilkurall on  | 


அகவை ஆறினை இந்த மே மாதத்தில் நிறைவு செய்ய நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தனது அரசவை அமர்வினை அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடாத்தி வருகின்றது.
புலம்பெயர் தேசங்களில் இருந்து அரசவைப் பிரதிநிதிகளும், மேற்சபை உறுப்பினர்களும், இந்த அரசவை அமர்வில் நேரடியாக பங்கெடுத்து வருகின்றனர்.
மே 15-16-17 ஆகிய நாட்களுக்கு இடம்பெறுகின்ற மைய அமர்வோடு, இருந்து ஒரு தொகுதி அவை உறுப்பினர்கள் லண்டனில் இருந்து இணையவழி தொழில்நுட்ப பரிவர்த்தனையூடாக பங்கெடுத்து வருகின்றனர்.
புதிய சிந்தனையுடன் புதியதோர் கோட்பாட்டுத் தளத்தில் உலக மக்களுக்கெல்லாம் முன்னோடியாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது என அமர்வின் தொடக்க நாள் உரையில் தெரிவித்திருந்த பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், உலக வரலாற்றில் முன்னர் புகலிட அரசாங்கங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றதே அன்றி நாடு கடந்த அரசாங்கம் உருவாக்கப்பட்டதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,
தலைவர்கள் தங்களுடைய தேசத்தில் செயற்பட முடியாத நிலை உருவாகும் நிலையில் அங்கிருந்து வெளியேறி, தமக்கு ஆதரவு வழங்கும் நாடுகளில் தங்கியிருந்து உருவாக்கும் அரசாங்கம் புகலிட அரசாங்கமாகும்.
நாடுகடந்த அரசாங்கம் என்பது நாடுகடந்த நிலையில் வாழும் மக்களால் தமது தாயக விடுதலைக்கு பங்களிப்பு செய்யும் நோக்குடன், தாயகத்தில மறுக்கப்பட்ட அரசியல்வெளியை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் அனைத்துலக வெளியில் உருவாக்கப்படும் அரசாங்கமாகும்.
இந்த வகையில் கடந்த ஆறு ஆண்டுகளில் தமிழீழ மக்களின் தணியாத தாகமாகிய சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசு என்ற அரசியல் தீர்வை, எமது மக்களின் விடுதலை வேட்கையை குறியீடு செய்து நிற்கும் ஓர் அமைப்பாக நாம் உருவெடுத்துள்ளோம். அந்த இலக்கை வென்றடைவதற்காக ஜனநாயக வழியில், அரசியல் இராஜதந்திர முறையில் போராடுவதற்காக செயற்படும் அமைப்பாக நாம் வடிவெடுத்துள்ளோம்.
2010ம் ஆண்டு மே மாதம் இதே நாட்களில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் முதலாம் ஆண்டின் நிறைவை சிங்களம் வெற்றி மமதையுடன் கொண்டாடிக் கொண்டிருந்ததொரு தருணத்தில், உங்களால் தமிழர் தேசத்தை தோற்கடிக்க முடியாது என்பதனை முகத்தில் அறைந்து சொல்வதுபோல் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது முதலாவது கூடலினை மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுடன் உருவாக்கியது.
பொதுவாக அரசாங்கங்கள் ஓர் அரசை ஆளுகை செய்வதற்காக இயங்குபவை. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அரச கட்டமைப்பின்றி அதேவேளை தமிழீழ மக்களுக்காக அரச கட்டமைப்பொன்றை அமைப்பதற்காக உருவாக்கப்பட்ட அரசாங்கமாகும்.
இதனால் நாம் புவியியல் பிரதேசங்களைத் தமக்கெனக் கொண்டு அரசுகளை ஆளுமை செய்யும் அரசாங்கங்கள் போல், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை கற்பனை செய்யக் கூடாது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் எதிர்க்கட்சிகள் கிடையாது.
இங்கு பிரதமர் என்பது இந்த அரசியல் இயக்கத்தின் தலைமைச் செய்யபாட்டாளரே.
அமைச்சர்கள் என்பது துறைசார் பெர்றுப்பாளர்களே.
தமிழீழ மக்களின் அரசமைத்து அதனை ஆட்சி செய்கின்ற அரசியல் பெருவிருப்பினை குறியீடு செய்யும் வகையிலேயே இந்த அரசவை, அரசாங்கம், பிரதமர், அமைச்சர்கள் என்ற பெயர்களை அரசியல்யாப்பில் உள்வாங்கிக் கொண்டோம் என்பதனை நாம் மறந்து விடலாகாது.
கடந்த ஆறு வருடங்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்ச்சியாக தனது இலக்கினை நோக்கிச் செயற்பட்டு வருகிறது.
உணர்ச்சி வேகத்தில் இவ்வாறு இயங்குகிறார்கள். ஓரிரு ஆண்டுகளில் யதார்த்தம் புரிந்து உணர்ச்சி மயக்கம் தணிய வானில் பறப்பதை விட்டு தரையில் இறங்க விடுவார்கள் என்று கருதிய பலர் - அனைத்துலக அரசுகள் உட்பட இன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளை உன்னிப்பாக அவதானித்து வருவதனையும், எம்மோடான உரையாடல்களில் அக்கறை செலுத்தவதனையும் எம்மால் உணர முடிகிறது.
எமது செயல் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்பதில் நாம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம். எமது பட்டறிவில் இருந்து கற்றுக் கொண்டு நிர்வாக ரீதியான மாற்றங்களையும் மேற்கொண்டு வருகிறோம்.
அண்மையில் அமைச்சரவை விரிவாக்கத்தினை மேற்கொண்டுள்ளோம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளாக இல்லாதவர்களும் தலைமை தாங்கிச் செயற்படக்கூடிய வகையில் அமைச்சுக்களை விட சில மையங்களையும் அமைத்துள்ளோம். தற்போது துறைகள் சார்ந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்கு மையங்களை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவைப் பிரதிநிதிகளாக இல்லாதோர் தலைமை தாங்கிச் செயற்படுத்துகின்றனர்.
பட்டறிவில் இருந்தும் பாடங்களைக் கற்று செயலில் முன்னோக்கி நகர்தல் அவசியம் எனக் கருதி இயங்கி வருகிறோம் என தனதுரையில் பிரதமர் வி.உருத்திரகுமாரன அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.



இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top