Headlines
Admin-message

2016 முள்ளி வாய்க்கால் நினைவால் தொடரும் போராட்டத்தை மீளவும் வலுப்படுத்துவோம்

Published by tamilkurall on  | 


அன்பான எனது சகோதரரே! மீளவும் எமது இனத்தின் போராட்ட சரித்திரத்தில் மறக்கவோ மறைக்கவோ மறுக்கவோ முடியாத நிகழ்வுகளை நினைவு கூருகின்றோம். இந் நினைவு நாட்களை கருத்துள்ள பொருத்தமான முறையிலே நடாத்தி, எமது போராட்டத்தை விரக்தியிலிருந்து விடுவித்து, வீரத்துடனும் வேகத்துடனும் செயற்பட, மன உறுதியும் ஆன்ம பலமும் சேர்ப்போமாக என எஸ். ஜே. இம்மானுவேல் குறிப்பிட்டுள்ளார்.
“முடிந்த முள்ளிவாய்க்காலும் தொடரும் போராட்டமும்” என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை 2010 வெளியிட்டிருந்தேன். முள்ளிவாய்க்காலில் நடந்து முடிந்த சம்பவங்களின் காரணமாக, போருக்கு பெரும் ஆதரவை கொடுத்தவர்கள் தன்னும் விரக்தியின் எல்லைக்கு தள்ளப்பட்டார்கள், சிலர் வீழ்ந்தும் விட்டார்கள்.
ஆனால் பெரும்பான்மையானோர் தொடர்ந்தும் போராடுகின்றனர். இது நல்லது.
தற்போதைய போராட்டத்தின் உருவம் மாறிவிட்டாலும், அதன் அடிப்படை இலட்சியம் மாறவில்லை. ஆகையினால் தற்போதைய போராட்டத்தின் உருவத்தையும் தேவைகளையும் புரிந்து உணர்ந்து எல்லோரும் தமக்குரிய பங்கை உரிய முறையில் செய்ய அழைக்கப்படுகிறார்கள்.
நாமும் ஈழத் தமிழினத்தை சோந்தவர்கள் தமிழ் விடுதலைப் போராட்டத்தில் பங்காளிகள் என்பதை நிருபிப்பதற்கு போரினால் பாதிக்கப்பட்டு இன்னும் வாழத் துடிக்கும் மக்களுக்கு எமது உதவிக் கரங்களை நீட்டி எமது நம்பகத் தன்மையை நிரூபிக்க வேணடும்.
மக்கள் மட்டத்திலே நினைவு நிகழ்ச்சிகளும் கருத்துப் பரிமாறுதல்களும், எதிர்ப்பு நடவடிக்கைகளும் தொடர வேண்டும். அவைகளுக்கு எல்லோரும் இயலுமான முறையில் பங்களிக்க வேண்டும். இவைகள் மாத்திரம் போதாது.
போரட்டத்தின் புதிய சர்வதேச உருவத்தினால் வேண்டப்படும் விசேட பணிகள் இருக்கின்றன. அவைகளை அந்தந்த நாடுகளில் அந்தந்த அரசாங்கங்கள் அரசியல்வாதிகள் மத்தியில் முன்னெடுக்க தமிழ் புத்தி ஜீவிகளும் உத்தியோக தேர்ச்சி பெற்றவர்களும் தனியாகவோ அமைப்பாகவோ முன்வர வேண்டும். இது தற்போதைய முக்கிய தேவை.
கடந்த கால கடும் முயற்சிகளினால் தான், நாம் ஜெனீவாத் தீர்மானத்தை அடைந்தோம். இலங்கை அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளுக்கு ஒப்ப இன்னும் எத்தனையோ செய்ய வேண்டியிருக்கின்றது.
அரசாங்கத்தின் தலைமைத்துவம் நல்லதை இலக்கு வைத்தாலும், நடமுறைப்படுத்த வேண்டியவர்கள் இன்னும் பழைய அரசை சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர்.
மறு பக்கத்தில் எமக்கு சார்பாக நீதி கோர வேண்டிய சர்வதேச அரசாங்கங்களும் தமது சுய நலத்தை கைவிட்டு எமக்குதவ முன்வரமாட்டார். நாமே தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இந் நிலையில், நாம் நம்பிக்கையை கைவிடாது, இலட்சிய ஒற்றுமையுடன், ஒருவரையொருவர் குற்றம் சூட்டாது, தள்ளிவிழுத்தாது, தூய மனதுடன் இன்னும் மும்முரமாக செயற்பட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் எமக்கு புத்துயிர் ஊட்டுவதாக.
உங்கள் பணியாளன்
எஸ். ஜே. இம்மானுவேல்
ஜேர்மனி, 17.05.2016

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top