ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இணங்கிய யோசனையை நடைமுறைப்படுத்தஇலங்கையுடன் அமெரிக்க இணைந்து செயற்படுவதாக அமெரிக்காவின் உயர் ராஜதந்திரி தெரிவித்துள்ளார்.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவு சிறப்பான நிலையில் உள்ளது. இந்தநிலையில் ஐக்கிய நாடுகளில் இணங்கிக்கொண்டப்படி இரண்டு நாடுகளும் யோசனைகளை நடைமுறைப்படுத்த இணைந்து செயற்படுவதாக தெற்காசிய வலயத்துக்கான அமரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் நியூயோர்க்கில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இன்று தெரிவித்துள்ளார்.
இந்திய செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக அமெரிக்காவுடனான இலங்கையின் உறவில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது எனினும், தற்போது இணைந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளால் இலங்கை மக்களுக்கு நன்மையைபெற்றுக்கொள்ளமுடியும் என்று பிஸ்வால் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இலங்கை சர்வதேசத்துக்கு மத்தியில் தலைமைத்துவத்தை நிரூபிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மனித உரிமைகளில் மேம்பாடு, பொறுப்புக்கூறல், நீதி மற்றும் ஜனநாயகம் என்ற அடிப்படையில் இலங்கை சர்வதேச பொருளாதாரத்துக்கு தமது பங்களிப்பை வழங்கமுடியும்.
இலங்கையை பொறுத்தவரை, இந்துசமுத்திரத்தில் முக்கிய பாத்திரத்தை வகித்து கடல் பாதுகாப்பையும், கடற்றொழிலின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தமுடியும்.
அமெரிக்காவை பொறுத்தவரை, 2017ஆம் ஆண்டில் வரவுசெலவுத்திட்டத்தில் இலங்கையின் மனிதஉரிமை காப்பு, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றுக்காக 39.8 மில்லியன்டொலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, இலங்கையின் வர்த்தகத்துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமெரிக்க திறைசேரிதிணைக்களம் இலங்கையில் ஆலோசகராக ஒருவரை நியமிக்கவுள்ளது.
அவர், அடுத்த இரண்டு வருடங்களுக்கு இலங்கையின் நிதியமைச்சின் பொதுநிதி முகாமைத்துவமீளமைப்புக்கு உதவியளிப்பார் என்றும் பிஸ்வால் குறிப்பிட்டுள்ளார்.

