Headlines
Admin-message

புலம்பெயர் தேசங்களில் உணர்வுபூர்வமாக தொடங்கிய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்!

Published by tamilkurall on  | 


புலம்பெயர் தேசங்களில் மே 18 தமிழீழத் தேசிய துக்க நாளினை மையப்படுத்தியதான, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் மே12ம் வியாழக்கிழமை உணர்வுபூர்வமாக தொடங்கப்பட்டது.
சிறிலங்கா அரச ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ள தமிழீழத் தாயகத்திலும், இராணுவ அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நினைவேந்தல் வாரம் உணர்வுபூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது.
பெரும் இனஅழிப்பின் ஒன்றின் ஊடாக தமிழர் தேசத்தினை சிங்கள அரசு ஆக்கிரமிப்புச் செய்திருந்த நாளினை தமிழீழத் தேசிய துக்க நாளாக பிரகடனப்படுத்தியிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்,மே 12 முதல் 18 வரையிலான நாட்களை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமாக கடைப்பிடித்து வருகின்றது.
இந்நிலையில் புலம்பெயர் தேசங்களில் நினைவேந்தல் வாரம் உணர்வுபூர்வமாக தொடங்கப்பட்டுள்ளதோடு, நாடுகடந்த தழிழீழ அரசாங்கத்தின் அரசவை சிறப்பாக கூடுகின்றது.
*நினைவேந்தல் குறிப்புரை :*
ஈழத்தமிழினத்தின் மீதான சிங்கள அரசினது கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பின் உச்சமாக மே 18, 2009ம் ஆண்டில் கொத்துக் கொத்தாக பல்லாயிரக்கணக்கான எமது உறவுகள் படுகொலை செய்யப்பட்டனர்.
தமிழ்மக்களின் அரசியல் பெருவிருப்பினை வெளிப்படுத்துவதற்கான அரசியல் வெளியை உருவாக்கி நிகழ்வுபூர்வமாக உலகிற்கு பறைசாற்றி நிமிர்ந்திருந்த நடைமுறைத் தமிழீழ அரசு அழிக்கப்பட்டு தமிழர் தேசம் சிங்களத்தினால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டது.
இது தமிழீழம் நோக்கிய விடுதலைப் பயணத்தில் பெருந்துயர் எமை ஆட்கொண்ட துக்கநாள்!
இந்த நாட்களில் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் நரபலி எடுக்கப்பட்டு தமது இன்னுயிர்களை இழந்த எது உறவுகளையும் சிங்களத்தின் ஆக்கிரமிப்பை எதிர்த்து நின்று போராடி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட அனைத்து மாவீரர்களையும் நினைவேந்தி வணக்கம் செய்வோம் !
*தமிழீழ தேசிய துக்க நாள் *
முள்ளிவாய்க்கால் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கியமான ஒரு கூட்டு நினைவு ஆகும். யூதர்கள் மேல் நாசிகளால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு எவ்வாறு யூத மக்களிடையே ஒரு வரலாற்றுக் கூட்டு நினைவாக அமைந்ததோ அதேபோல தமிழர்களுக்கு, ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகில் வாழும் அனைத்துத் தமிழர்களுக்கும் முள்ளிவாய்க்கால் ஒரு முக்கியமான கூட்டுநினைவாக அமைகிறது.
தமிழருக்கு எதிரான இனப்படுகொலையின் ஓர் இரத்த சாட்சியமாக இருக்கிறது.
துயர் தோய்ந்த, அவலம் நிரம்பிய கூட்டு நினைவுகள் ஒரு மக்கள் கூட்டத்தின் ஆழ்மனதில் காலம் காலமாக நிலைத்து நிற்கக் கூடியவை. வரலாற்றை மாற்றும் சக்தி கொண்டவை.
யூத மக்களின் தமக்கான தனி அரசு என்ற கனவு நாசி இனப்படுகொலையின்பின் தான் சாத்தியமாகியது.
பலஸ்தீன மக்களுக்கென எதிர்காலத்தில் உருவாகவிருக்கும் தனிஅரசும் இம் மக்கள் தாம் அனுபவித்து வரும் ஒடுக்குமுறைகளின் கூட்டு நினைவினை அரசியல் இயக்கமாகத் தொடர்ச்சியாகப் பேணி வருவதனால்தான் சாத்தியமாகப் போகிறது.
ஈழத் தமிழ் மக்களுக்கும் இவ்வுதாரணங்கள் மிகவும் பொருந்தப் போகின்றன.
தமிழீழத் தேசிய துக்க நாள் நாம் துயரத்தால் துவண்டு போகும் நாள் அல்ல.
மாறாக நமது மக்கள் அடைந்த துயரத்தையும் துன்பத்தையும் அவலத்தையும் நமக்குள் உயிர்ப்பாய் உள்வாங்கி நாம் ஒரு தேசமாக பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கு சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசினை அமைப்பதே ஒரேவழி என்பதனை நமக்குள் நாமே உறுதி பூணுவோம்

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top