புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பத்து சந்தேக நபர்களையும் எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற் துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம்.றியாழ் தெரிவித்துள்ளார்.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணை இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் போது பத்து சந்தேக நபர்களும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்கள் அதனை தொடர்ந்து வழக்கினை 18ம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார். அது வரையில் பத்து சந்தேக நபரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு இட்டார்.
இதுவரை காலமும் பிறிதொரு திகதியில் நடைபெற்று வந்த பதினோராம் மற்றும் பன்னிரெண்டாம் சந்தேக நபர்களின் வழக்கு விசாரணையும் எதிர்வரும் 18ம் திகதி நடைபெறவுள்ளதுடன் அன்றைய தினம் மரபணு பரிசோதனை அறிக்கையும் நீதிமன்றில் கையளிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்க படுகின்றது.
இதேவேளை விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த சந்தேக நபர்களின் ஒரு வருடத்துக்கான விளக்கமறியல் காலம் 11.05.2016 ஆம் திகதி முடிவுறுகின்றது.
இந்த நிலையில் இவர்களது விளக்கமறியல் காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிப்பதற்கு நீதவான் நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு, பிணைச்சட்டத்தின் 17 ஆம் பிரிவின் கீழ் இந்த மனு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்படுவதாக அரச சட்டவாதி ஜனாப் சக்கி இஸ்மாயில் மன்றில் தெரிவித்தார்.
இதனையடுத்து இந்த வழக்கின் சந்தேக நபர்கள் 9 பேரினதும் விளக்கமறியல் காலத்தை நீடிப்பதா என்று விசாரணை செய்வதற்கு எதிர்வரும் 11 ஆம் திகதி புதன்கிழமை அவர்களை நீதிமன்றில் ஆஜராக்குமாறு அனுராதபுரம் மறியற்சாலை அத்தியட்சகருக்கு மேல் நீதிமன்றநீதிபதி இளங்செழியன் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

