முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இராணுவ வீரர்களுக்கு எதிராக பாரியளவில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ஒரு தொகுதி இராணுவ உத்தியோகத்தாகள் அண்மையில், அந்தக் கடமைகளிலிருந்து விடுவிக்கப்பட்டு இராணுவத் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு மீள அழைக்கப்பட்டவர்களில் அதிமானவர்ளுக்கு எதிராக பாரியளவிலான குற்றச்சாட்டுக்களும் முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது புலனாய்வுப் பிரிவினர், நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு, லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு பிரிவு மற்றும் இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு விசாரணைகளில் இந்த படைவீரர்களின் பெயர்கள் தொடர்புபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாரியளவிலான குற்றச் செயல்களுடன் இந்த இராணுவ உத்தியோகத்தர்களுக்கு தொடர்பு இருப்பதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த இராணுவ வீரர்கள் இராணுவ ஒழுக்க விதிகளை மீறியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றச் செயல்களில் ஈடுபட்ட போதிலும் இவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இராணுவ சம்பளத்தின் ஊடாக ஈட்ட முடியாத அளவிற்கு சில படைவீரர்கள் சொத்துக்களை குவித்துள்ளனர்.
சொத்து குவிப்பு குறித்து லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றிய காலத்தில் இராணுவத் தளபதிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் உத்தரவுகளை மதிக்காது செயற்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்புப் பிரிவிலிருந்து வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்ட இராணுவ உத்தியோகத்தர்கள், மஹிந்தவின் காலில் வீழ்ந்து மண்டியிட்டு ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டதனையும், மஹிந்த தலையை தடவை அவர்களுக்கு ஆசி வழங்கும் காட்சிகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொதுவாக இராணுவ வீரர்கள் பிரியாவிடை பெறும் போது சல்யூட் செய்வதே வழமையாகும்

