இலங்கையில் செயற்பட்டு வரும் இந்தியாவின் பிரபல தொலைத்தொடர்பாடல் நிறுவனம் ஒன்று, சுங்க திணைக்களத்திற்கு 700 மில்லியன் ரூபா மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
Tele line மற்றும் பரிமாற்ற சாதனங்கள் (Transmitting Equipment) கொண்டு வருவதற்காக சுங்க கட்டணத்தை செலுத்தாமல் 700 மில்லியன் ரூபா மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் பிரதான அமைச்சர் ஊடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், சுங்க திணைக்களத்திற்கு பணம் செலுத்தாமல் விடப்பட்டுள்ளது.
இந்த மோசடி தொடர்பில் சுங்க அதிகாரிகள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விடயம் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் இராஜதந்திர மட்டத்தில் நெருக்கடியை ஏற்படுத்தக் கூடும் என சுங்க பிரிவு பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியிடம் பணத்தை செலுத்தி பிரச்சினை முடிவுக்கு கொண்டு வருமாறு இந்திய தூதரகம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பிரச்சினை எதிர்வரும் காலங்களில் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்படவுள்ள வர்த்தக ஒப்பங்களுக்கு பாதகங்களை ஏற்படுத்தும் என இந்திய தூதரகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த நிறுவனத்தின் சுங்க வரிவிலக்கற்ற பொருளாக Tele line கொண்டு வந்துள்ள நிலையில் சுங்க விசாரணைகளின் பின்னர் அவை 153 மில்லியன் ரூபா வங்கி பிணையை வைத்து அந்த நிறுவனத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
விடுவிக்கப்பட்ட பொருட்கள் தொடர்பில் சுங்க பிரிவு பல்வேறு விசாரணைகளின் பின்னர் அவைகளுக்காக 350 மில்லியன் சுங்க கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் குறித்த நிறுவனம் சுங்க பிரிவிற்கு கட்டணம் செலுத்தாமல் வழக்கறிஞர் ஏ.எல்.எம். அமின் ஊடாக வழக்கு ஒன்று தாக்கல் செய்துள்ளது.
கடந்த 04ஆம் திகதி அந்த வழக்கிற்காக அழைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நீதிமன்றில் ஆஜராகவில்லை.
குறித்த வழக்கு விசாரணையில் இருந்த போது அந்த நிறுவனத்தினால் மீண்டும் ஒரு முறை பரிமாற்ற சாதனங்கள் (Transmitting Equipment) கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் அதற்காக செலுத்தப்படவுள்ள சுங்க கட்டணம் 350 மில்லியன் ரூபாவாகும்.
இதற்கான வழக்கு விசாரணைக்காக நாளைய தினம் மீண்டும் அழைக்கப்படவுள்ள நிலையில், செலுத்தப்பட வேண்டிய 700 மில்லியன் கட்டணத்தை செலுத்த தவறினால் குறித்த நிறுவனத்திற்கு மேலும் பல ரூபாய் தண்ட பணம் செலுத்த நேரிடும். இதற்கமைய ஒரு பில்லியனுக்கும் அதிகமான பணம் செலுத்த நேரிடும் என தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் இந்தியாவின் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி எயார்டெல் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

