கிருலபனை பகுதியில் நடைபெற்ற கூட்டு எதிரணியின் மே தின நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.
யுத்தத்தை உரிய முறையில் நிறைவு செய்யாதமையினால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டிருந்தார்.
அத்துடன், தமது அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 12 பில்லியன் டொலர்களையே கடனாக பெற்றுக் கொண்டது எனவும், அதில் நான்கு பில்லியன் அமெரிக்க டொலர் யுத்தத்திற்காக செலவிடப்பட்டது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அத்துடன், எஞ்சிய 8 பில்லியன் அமெரிக்க டொலர்களை வைத்தே நாட்டின் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
எனினும், புதிய அரசாங்கம் ஆட்சி பீடமெறியவுடனேயே தற்போது பாரியளவிலான கடனை கோரியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, மிஹின் லங்கா மற்றும் ஸ்ரீலங்கன் எயார் லயின்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஒரு போதும் நட்டமடையவில்லை என கூறிய மஹிந்த ராஜபக்ஸ, அவை நட்டமடைந்ததாக கூறி அந்த நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன், இந்த அரசாங்கம் தனது புதல்வரான நாமல் ராஜபக்ஸவை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும், சிறைக்கு செல்ல தயாராக இருக்குமாறு தான் நாமல் ராஜபக்ஸவிற்கு கூறியுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.
நாமல் ராஜபக்ஸ மாத்திரமன்றி, கோத்தாபய ராஜபக்ஸவையும் தன்னையும் இந்த அரசாங்கம் கைது செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுத்து வருவதாக அவர் கூறினார்.
அத்துடன், நாட்டு மக்களுக்காக தாம் எத்தனை சிறைகளுக்கும் செல்ல தயாராகவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்படவுள்ளமையினால், இனிவரும் காலங்களில் 100 ரூபாவிற்கு ரிலோட் செய்தால், 53 ரூபாவிற்கு மாத்திரமே பேச முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இனிவரும் காலங்களில் காதலிப்பவர்களும் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார்.

