முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை புலனாய்வு பொறுப்பாளர் கலையரசன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை – அரசடி பகுதியில் வைத்து பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கலையரசன் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள கலையரசன் தற்போது கொழும்பிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அம்பாறை மாவட்ட தளபதி ராம் மற்றும் நகுலன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்த நிலையிலேயே, கலையரசனும் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவதற்கான காரணம் என்னவென ட்ரு சிலோன், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகரவிடம் வினவியது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்க வேண்டிய தேவை பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு உள்ளமையினால், அவர்கள் விசாரணைகளுக்காக அழைத்து வரப்பட்டுள்ளதாக அவர் பதிலளித்தார்.
இவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றமைக்கான காரணத்தை பயங்கரவாத விசாரணை பிரிவினர் வெளியிட மாட்டார்கள் எனவும், அது விசாரணைக்கு இடையூறாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

