இந்த சம்பவம் நேற்று இரவு 7.30 மணி அளவில் இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது.
பொகவந்தலாவ பிரதேசத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் உயர் தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரை பொகவந்தலாவ குயினா தோட்டப் பகுதியை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவரே கடத்த முற்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,
முச்சக்கர வண்டி சாரதி, தன்னுடைய புகைப்படத்தை வைத்து கொண்டு முகப்புத்தகத்தில் பதிவேற்றுவதாக கூறியுள்ளதுடன், அவ்வாறு செய்யாமல் இருக்க தன்னோடு வரவேண்டுமென தன்னை மிரட்டியதாகவும் குறித்த மாணவி பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முச்சக்கர வண்டி சாரதியின் மிரட்டலுக்கு பயந்து நேற்று மாலை மேலதிக வகுப்பிற்கு செல்வதாக கூறி விட்டு முச்சக்கர வண்டி சாரதியோடு சென்ற மாணவியை பொகவந்தலாவ பெற்றோசோ பகுதியில் உள்ள பொலிஸ் சோதனை சாவடியில் வைத்து பொலிஸார் காப்பாற்றியுள்ளனர்.
குறித்த முச்சக்கரவண்டி சாரதி முச்சக்கர வண்டியோடு பலாங்கொட மாரதென்ன பகுதியில் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பொலிஸாரால் காப்பற்றபட்ட சிறுமி பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட பின்னர் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தலைமறைவாகியுள்ள முச்சக்கர வண்டி சாரதியை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

