எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஒரு தமிழன் என்பதால் தான் இராணுவ முகாம்களுக்குள் செல்லத் தடையா? அவ்வாறு தடை விதித்தது யார்? என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
மற்றைய நாட்களில் நாங்கள் படை முகாம்களுக்குள் சென்றுள்ளோம், உறங்கியும் இருக்கின்றோம், அப்பொழுது எல்லாம் மௌனம் காத்த இவர்கள் சம்பந்தன் சென்றதை மட்டும் ஏன் இவ்வாறு பெரிதுபடுத்துகிறார்கள் என தெரிவித்தார்.
கடந்த 16ம் திகதி நடந்த இந்த சம்பவத்தை இவ்வளவு தூரத்திற்கு கொண்டுவர வேண்டுமா? 10 நாட்களைக் கடந்த நிலையிலும் இது பற்றிய கருத்துக்கள் தேவையற்ற ஒன்றே எனவும் கூறினார்.
இதன்போது தமிழ் அரசியல் கைதிகள் சம்பந்தமாக ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் கைது செய்யப்படுகின்றார்கள். புனர்வாழ்வு பெற்றவர்களும் நம் நாட்டுப் பிரஜைகளே” என அமைச்சர் விளக்கமளித்தார்.
மேலும் விசாரணைகள் என்பது சகஜமான ஒன்று. தற்போது வடக்கு மற்றும் கிழக்கில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த விடயம் தொடர்பாக விசாரணைகளின் போது சிலருடைய பெயர்கள் வெளிவரத்தான் செய்யும். இது ஒன்றும் பெரிய விடயம் இல்லை. எனவும் இதன்போது சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

