Headlines
Admin-message

பேரினவாதம் மீண்டும் பெரும் தீயைக் கக்குகிறது!.

Published by tamilkurall on  | 


வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி என்பதற்குக் கூட தென்பகுதிப் பேரினவாதிகள் சீறிப் பாய்ந்து நாடு பற்றி எரியும் என எச்சரிக்கை செய்கின்றனர்.
கூடவே வடக்கின் முதல்வர் விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டும் என்றும் கோஷ­ம் போடப்படுகிறது. இருந்தும் தமிழ்த் தலைவர்கள் அமைதியாக இருக்கின்றனர்.
ஒரு காலத்தில் கொட்டி என்ற சொல்லைக் கேட்டு மாடியில் இருந்து குதித்து ஓடியதை தென்பகுதி மிக வேகமாக மறந்து விட்டது என்று சொல்வதற்கு எங்களிடமும் ஆட்கள் இல்லாமல் போய்விட்டனர்.
இந்நிலையில் சமஷ்டி என்பதற்கு இத்துணை தூரம் கொதித்து எழும் பேரினவாதிகளை அடக்குவதற்கும் இவர்கள் நாட்டில் அமைதியைக் குலைக்கிறார்கள் என்று கூறி சிறையில் அடைப்பதற்கும் ஆட்சியாளர்கள் தயாரில்லை.
தமிழர்கள் தங்கள் உரிமை பற்றிக் கதைத்தால் அது பயங்கரவாதம், அது நாட்டைக் கூறுபோடும் சதித்திட்டம் என்றெல்லாம் கூறி சட்டத்தின் பிடிக்குள் தமிழர்களை அகப்படுத்தி சிறையில் அடைப்பவர்களுக்கு, இனவாதத்தை யார் பேசினாலும் அது குற்றம் என்பது புரியாமல் போனமைதான் எங்கள் நாட்டின் மிகப்பெரும் துரதிர்ஷ்டமாகும்.
மிகப்பெரியதொரு யுத்தம் நடந்து அந்த யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்ட கொடும் செயல் நடந்தும் அது கண்டு பெரும்பான்மையினம் இரக்கம் கொள்ளாமல் இருப்பதன் காரணம்தான் என்ன
இலங்கையில் ஒரு நீதியான ஆட்சி நடக்குமாக இருந்தால், தமிழ் மக்களுக்கு உரிய உரிமைகளை சிங்கள மக்கள் தாமாக வழங்க வேண்டும்.
அதுவே வன்னிப் போரில் தமிழ் மக்கள் அனுபவித்த இழப்புக்கான பரிகாரமாக இருக்க முடியும் என்று ஆட்சியாளர்களும் பெளத்த பீடங்களும் சிங்கள மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
ஆனால் நல்லாட்சியினரும் பெயரளவில் நல்லாட்சி என்று கூறிக் கொள்கின்றனரே தவிர, அவர்களிடமும் சூழ்ச்சிகளும் சூக்குமங்களும் நிறையவே உண்டு.
சமஷ்டியை தந்தால் பேரினவாதம் சீற்றம் கொள் என்பது போல காட்டிக்கொள்வது, இனப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­ மீண்டும் எழுந்து கோலோச்சுவார் என்று பயப்படுத்துவது,இவற்றின் ஊடாக தமிழ் மக்களின் உரிமைகளை வழங்காமல் காலம் கடத்துவது என்ற நுட்பத்தை நல்லாட்சியும் பிரயோகித்து வருகிறது.
இதற்கெல்லாம் மூலகாரணம் சர்வதேச போர்க்குற்ற விசாரணையை கைவிட்டு அதற்குப் பதிலாக எதிர்க்கட்சித் தலைமைப் பதவியை பிச்சையாக வாங்கிக் கொண்ட எங்கள் நாசகாரம் என்பதை நாம் ஒருபோதும் மறந்து விடக்கூடாது.
தேர்தலில் யார் வென்றாலும் வன்னியில் நடந்தது இன அழிப்பு என்பதால், சர்வதேசப் போர்க்குற்ற விசாரணையை நடந்த வேண்டும்.
அந்த விசாரணை மிகுதியைத் தீர்மானிக்கும் என்று பகிரங்கமாகக் கூறியிருக்க வேண்டிய தமிழ் அரசியல் தலைமை எலும்புத் துண்டுக்கு ஆசை கொண்டதால், இன்று வடக்கின் முதல்வர் விக்னேஸ்வரனை கைது செய், சமஷ்டி என்றால் தமிழரை அழிப்போம், தொலைப்போம் என்றெல்லாம் பேரினவாதம் பெரும் தீயைக் கக்குகிறது.
என்ன செய்வது! இழந்த தமிழினத்தை தொடர்ந்தும் அதட்டுகின்ற அநீதியை சர்வதேசமும் பார்க்கவில்லை.
அந்த ஆண்டவனும் கண்டுகொள்ளவில்லை என்றால் எங்கள் தலைவிதி எப்படியாகும் என்பதுதான் தமிழர்களின் இப்போதைய பெரும் கவலை.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top