ஆனையிறவு மற்றும் பூநகரி இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்துவதற்குத் தலைமை வகித்த ராம், யால தேசிய சரணாலயத்தில் இடம்பெற்ற பல்வேறு தாக்குதல் சம்பவங்களுடனும் தொடர்புபட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.
கடந்த 24ம் திகதி திருக்கோவில் - தம்பிலுவில் பகுதியிலுள்ள அவரது வீட்டிலிருந்த இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டதாக அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனையடுத்து, கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட ராம், பயங்கரவாத விசாரணைப்பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
முன்னதாக, புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண தளபதியாக செயற்பட்ட கருணா அம்மான் புலிகள் அமைப்பிலிருந்து விலகியதையடுத்து, ராம் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு ஆயுதப் பிரிவுக்குப் பொறுப்பாக விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனால் நியமிக்கப்பட்டார்.
கடந்த 2009ம் ஆண்டு இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட அவர், 2013ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

