ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை துண்டாடும் பாவச் செயலிலிருந்து மஹிந்த ராஜபக்ச தவிர்ந்து கொள்வதற்கான காலம் இன்னும் கடந்து விடவில்லை என தென்மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பு, நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள அரசாங்கத் தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
சுதந்திரக் கட்சியின் ஆலோசகர் என்ற வகையில் கட்சியின் ஏனைய உறுப்பினர்களை கட்சிக்குள் தக்கவைத்துக் கொள்வது மஹிந்த ராஜபக்சவின் கடமையாகும்.
பொதுமக்களின் ஆதரவு இல்லாத சிறு கட்சிகள் சில ஒன்றிணைந்து தமது இருப்புக்காக நடத்தப்படும் மேதினக் கூட்டமே கிருலப்பனையில் நடைபெறவுள்ளது.
அத்துடன் சுதந்திரக் கட்சியை துண்டாடுவதே இக்கூட்டத்தை ஏற்பாடு செய்கின்றவர்களின் நோக்கமாகும். அவ்வாறிருக்கையில் அதில் மஹிந்த ராஜபக்ச கலந்து கொள்வது அவருக்கு அழகல்ல.
எனவே சுதந்திரக் கட்சியை துண்டாடும் செயற்பாட்டில் இருந்து மஹிந்த ராஜபக்ச தவிர்ந்து கொள்ளவேண்டும்.
அதற்கான காலம் இன்னும் கடந்து விடவில்லை என்றும் ஷான் விஜயலால் சில்வா தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

