எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டோர் கிளிநொச்சியில் இராணுவ முகாம் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்ததாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் சென்ற இடத்தில் இராணுவ முகாம் எதுவுமில்லை எனவும் கூட்டமைப்பு கூறியுள்ளது.
கிளிநொச்சி நகருக்கு மத்தியில் இராணுவம் இன்னும் பிடித்து வைத்துள்ள இடம் ஒன்று குறித்து பிரதேசவாசிகள் வழங்கிய தகவல் ஒன்றை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர் அந்த இடத்தை பார்வையிட சென்றதாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்த பிரதேசத்தில் உள்ள தமது வீடுகளை குடியேற அரசாங்கத்திடம் அனுமதி பெற்றுத் தருமாறு பிரதேச மக்கள் எதிர்க்கட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
அங்கு இராணுவ முகாம் இல்லை. அது மக்களின் காணிகள், இராணுவம் பலவந்தமாக இந்த இடத்தை பிடித்து வைத்துள்ளது.
இராணுவம் சட்டவிரோதமாக சாதாரண மக்களின் காணிகளில் நிலைகொண்டுள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

