ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த மீன் ஏற்றுமதிக்கான தடை நீக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சின் ஊடக இணைப்பாளர் டப்ளியூ.எம்.டி.வன்னிநாயக்க வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீன் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை இம்மாதம் 21ஆம் திகதியுடன் நீக்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்திருந்ததாக கடற்றொழில் அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தது.
எனினும், ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல் உண்மைக்கு புறம்பானது எனவும், 21ஆம் திகதி மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்குவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று மாத்திரமே இடம்பெறவுள்ளதாகவும் அமைச்சு அதற்கு பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



