Headlines
Admin-message

பொலிஸ் மா அதிபர் நியமனத்தில் சர்ச்சை

Published by tamilkurall on  | 

 புதிய பொலிஸ் மா அதிபர் தெரிவில் அரசியலமைப்பு சபை நடந்துகொண்ட முறை குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை மறுத்திருக்கும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ, இது விடயத்தில் அரசியலமைப்பு சபை தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்குள்ளேயே செயற்பட்டதாகக் கூறியுள்ளார்.
இதில் கருத்து வேறுபாடு இருந்திருந்தால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸ் மா அதிபர் பதவிக்கு யாரைத் தெரிவு செய்வது என்பதில் இறுதி முடிவெடுப்பதைத் தவிர்த்திருப்பார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
புதிய பொலிஸ் மா அதிபரை தெரிவுசெய்யும் விடயத்தில் அரசியலமைப்பு சபை முறையாக நடந்து கொள்ளவில்லையென மஹிந்த ஆதரவு அணியைச் சேர்ந்த உதய கம்மன்பில கூறியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே நீதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபரே ஜனாதிபதியின் பாதுகாப்புக்கும் பொறுப்பானவர். இவ்வாறான சூழ்நிலையில் புதிய பொலிஸ் மா அதிபரைத் தெரிவுசெய்யும் பொறுப்பை அரசியலமைப்பு சபைக்கு வழங்காமல் தானே தெரிவு செய்திருக்கலாம்.
ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அரசியலமைப்புத் தொடர்பான சர த்தை மேற்கோள்காட்டி கருத்துத் தெரிவித்த அமைச்சர், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பதவிகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுடைய பெயர்கள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் பொருத்தமான ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்கான அதிகாரம் அரசியலமைப்பு சபைக்கு சட்டரீதியாக வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார். அரசியலமைப்பின் 41 சீ சரத்தானது இத்தெரிவுக்கான அதிகாரத்தை வழங்குகிறது என்றார்.
இருந்தபோதும், சட்டமாஅதிபர் தெரிவின்போது ஜனாதிபதியிடமிருந்து இருவருடைய பெயர்கள் அரசியலமைப்பு சபைக்கு வழங்கப்பட்டது. இதில் ஒருவரைத் தெரிவுசெய்து அரசியலமைப்பு சபை அதனை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்திருந்தது.
அதேநேரம், பொலிஸ்மா அதிபரைத் தெரிவுசெய்வதற்காகக் கூடியிருந்த அரசியலமைப்பு சபையில் உறுப்பினரான அமைச்சர் சம்பிக்க ரணவக்க கலந்துகொண்டிருந்தமை தொடர்பில் சக உறுப்பினர்கள் எவரும் கருத்து முரண்பாட்டைக் கொண்டிருக்கவில்லை.
முன்னதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க அரசியலமைப்பு சபையில் கலந்துகொள்வது தொடர்பில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. விபத்து சம்பவமொன்று தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதாகும்.
இந்த விசாரணைகள் சாதாரண பொலிஸ் அதிகாரிகளால் நடத்தப்படுவது. பரிந்துரைக்கப்பட்ட எவரும் இதில் நேரடியாகத் தொடர்புபட்டிருக்கவில்லை என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top