யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் வவுனியா, முத்தையன்கட்டு மற்றும் புளியம்பொக்கனை ஆகிய பகுதிகளில் சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போனதாக கூறப்படும் மூன்று இளைஞர்கள் மாலைத்தீவிலிருந்து கொழும்பிற்கு அழைத்து வரப்பட்டு வெலிகடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விளையாடச் சென்ற தனது சகோதரன் 2005ஆம் ஆண்டு காணாமல் போயிருந்ததாக அவரது சகோதரி கௌரிராஜா கவிதா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு காணாமல் போன தனது சகோதரன் 6 வருடங்களுக்கு முன்னர் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு தான் மாலைத்தீவு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து அவரை பார்வையிட சென்று தான் வருகைத் தந்ததாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன், தனது சகோதரன் உள்ளிட்ட மூன்று இளைஞர்கள் தற்போது வெலிகடை சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கணேஸ் இராமச்சந்திரன், நவரத்தினராசா ரஞ்சித், முத்துலிங்கம் யோகராஜா ஆகிய மூவரும் மாலைத்தீவு மற்றும் வெலிகடை சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் தெளிவில்லாதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

