வட மாகாண முதலமைச்சர் இன்று வடக்கு மாகாண முதலமைச்சர் கதிரையில் அமர்ந்து கருத்துக்களை வெளியிடுவதற்கான சந்தர்ப்பத்தை தானே ஏற்படுத்திக் கொடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பின மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஸ மீண்டும் ஆட்சி அமைத்திருக்கும் பட்சத்தில் வட மாகாணத்தில் 10 வீத அபிவிருத்தி கூட இருந்திருக்காது என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் பத்தரமுல்லை பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தான் வட மாகாணத்திற்கான தேர்தலை நடாத்தியமையினாலேயே சீ.வி.விக்னேஸ்வரன் இன்று முதலமைச்சராக ஆசனத்தில் அமர்ந்திருக்கின்றார் என அவர் நினைவூட்டியுள்ளார்.
யுத்தத்தை நிறைவு செய்து, கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு அபிவிருத்தியை நோக்கி தான் கொண்டு சென்றதாகவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.
தான் செய்த பணிகளினாலேயே தற்போது அனைவராலும் கதைக்கக்கூடியதாக உள்ளதெனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

